Thursday 26 November 2015

தமிழீழத் தேசிய மாவீரர் தினம் 2015

செழுமை 28-11-2015
தமிழீழத் தேசிய மாவீரர் தினம் 2015



ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப் பற்றுவோம்!
இமைப்பொழுதும் சோராது காப்போம்!


அன்பார்ந்த தமிழீழ மக்களே,ஈழம் பிரிந்த தமிழர்களே, புத்திர சோகத்தில் புலம்பி அழும் தாய்மாரே, தந்தையரே,மாணவர்களே,இளைஞர்களே, சிறுவர்களே, குழந்தைகளே;

இன்று கார்த்திகை 27 2015 மாவீரர் நாள் . 

``இந்த மண் எங்களின் சொந்த மண் இங்கிதை வெல்ல யார் வந்தவன்`` என்று எழுதிய புலவர்கள் இன்று எம்மோடு இல்லை, அதற்காக போராடிய தலைவர்களும், தோழர்களும் கூட நம் கூட இல்லை.புனர்வாழ்வு பெற்றவர்களும் தூக்குக்கயிற்றில் தொங்குகிறார்கள் அல்லது புற்று நோயால் சாகின்றார்கள் , துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றோம்! 
ஆனால் மாவீரர் வம்சம் இருக்கின்றது, எம் தேசத்துக்கு விடுதலையின் 
வாஞ்சை இருக்கின்றது.

மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே, மற்றும் மரணித்த ஈழப்போராளிகளே செவ்வணக்கம்.

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக தாங்கள் விதைத்த உடலை, எம் விவசாய பூமியெங்கும் குளம் குளமாய் நிறைந்து உறைந்த குருதி வெள்ளத்தை, உறவாலும்- பொருளாலும் தாங்கள் இழந்த உடமையை, 
அலைந்து திரிந்து,அழிந்து ஒழிந்த, அகதி வாழ்க்கையை, நம் சொந்தத் தவறுகளுக்கு தாங்கள் கொடுத்த விலையை, நீண்ட போரை எதிர் கொள்வதில் தாங்கள் காட்டிய வீரத்தை, தீரத்தை, அவற்றை வகுத்தெடுத்து படைத்தளித்த கலையை, பண்பாட்டை, பக்குவத்தை, மனோ தைரியத்தை, மானுட வலிமையை,ஒரே வார்த்தையில் தங்கள் புரட்சிகர ஆற்றலை மதித்து, மனதில் பதித்து, துதித்து ஆன்மீக ஆராதனை நடத்தும் இப் புனிதப் பெருநாள்,

ஈழ விடுதலைக்கான கடமையையும், பாதையையும், பணிகளையும் பிரகடனம் செய்யும் புரட்சித் திருநாளுமாகும்.

அவ்வாறுதான் அது இதுகாலமும் இருந்து வந்திருக்கின்றது, அவ்வாறுதான் அது இனிமேலும் இருக்கவேண்டும், இருக்கும்.அத்திருநாளின் இவ்வருடப் பிரகடனம், 
ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவோம் என்பதாகும். இதுவே தான், இக்கட்டத்தில் நாம் மீண்டெழுவதற்கான ஒரே உந்துகோல் ஆகும்.

இவ்வாண்டு மாவீரர் நாள் ஒரு தனிக்குறிப்பான, முற்றிலும் பிரத்தியேகமான, இதற்கு முன் என்றும் இருந்திராத ஒரு புதிய சூழலில் பிறக்கின்றது. இப்புதிய சூழல் குறித்த தனிக்குறிப்பான ஆய்வும் மதிப்பீடும்,அதன் அடிப்படையில் அமைந்த செயல் தந்திர திட்டமும் இல்லாமல் ஈழவிடுதலைப் புரட்சிகர இயக்கத்தை தலைமையேற்று நடத்த முடியாது.ஆதலால் புதிய ஈழப் புரட்சியாளர்களாகிய நாம் எமது ஆய்வையும், செயல்தந்திர திட்டத்தையும், பணிகளையும், முழக்கங்களையும் மக்கள் முன் வைக்கின்றோம்.

ரணிலும் மைத்திரியும் போர்க்குற்றவாளிகளே!

ஈழ தேசிய இன ஒடுக்குமுறை அநீதி யுத்தத்தை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதி யுத்தம், பிரிகேடியர் பால் ராஜ் தலைமையில் முன்னூறு ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்பின் அடிமைச் சின்னமாக விளங்கிய 
ஆனையிறவுப் பெரும் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்டு, இராணுவ பலச் சமநிலையில் விடுதலைப் புலிகள் மேலோங்கியது யுத்த நிலைமையில் ஏற்பட்ட திருப்பு முனை ஆகும். 

இதன் அரசியல் விளைவாகவே நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்தார்.எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தார்.அதாவது சர்வ வல்லமை உள்ளவராக இருந்தார்!

இப் ``பேச்சுவார்த்தைக் காலம்`` முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு , அரசியல் தயாரிப்பு செய்யப்பட்ட காலமாகும். அதாவது போராடி அழிக்கமுடியாத விடுதலைப் புலிகளை, சூதாடி அழிக்க திட்டமிடப்பட்ட காலமாகும். அடிப்படையில் இது இந்திய விரிவாதிக்க அரசின் திட்டம், அமெரிக்கா இதை ஏற்றுக்கொண்டு தனது அமைதி முகம் நோர்வேயை முன் நிறுத்தி நிறைவேற்றியது, இதன் உள்ளூர் தரகன் தான் ரணில் விக்கிரமசிங்கே!
1) Regaining Sri Lanka திட்டம் 2) எரிக் சொல்கெய்யுமும், மெலிந்த மொற கொடவும், பீரீஸ்சும், வகுத்தளித்துக் கொடுத்து முன் மொழிந்த தீர்மானத்தை ``பாலா அண்ணை``  வழி மொழிந்த தேசத் துரோக -ஈழத்துரோக `அக சுயநிர்ணய  கோட்பாடு 3) கருணா  கருங்காலியை ஏவி நடத்திய புலிகள் இயக்க பிளவு, இவை அந்த அரசியல் தயாரிப்புக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சதிகளாகும்.

உண்மையில் இனப்பிரச்சனைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது இவர்களது நோக்கமாக இருந்திருக்கு மேயானால் , `உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்`- ஈழப்பிரிவினைக்கு மாற்றாக புலிகள் தலைமை முன் வைத்த அதிகாரப் பரவலாக்க ISGA  திட்டத்தில் பேரம் நடத்தி, ஒரு சமரச தீர்வுக்கு வந்திருக்க முடியும்.

ஆனால் அவ்வாறு நிகழ்வுகள் நடந்தேறவில்ல, ஏனென்றால் நோர்வே பேச்சு வார்த்தையை எதிரிகள் - குறிப்பாக இந்திய விரிவாதிக்க அரசு விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கான ஒரு பொறியாக பாவித்தார்களே ஒழிய,குறைந்த பட்சம் அவர்களே சறுக்க வைக்கப்பட்டபோது,  அரசியல் தீர்வுக்கான நெறியாகப் பாவிக்கவில்லை.

இக்காலத்தின் மாவீரர் தின உரையில் தான்  தளபதி பிரபாகரன் பேச்சுவார்தையின் பேரால் ரணில் சர்வதேசப் வலைப் பொறியில் தம்மைச் சிக்க வைக்க முயலுகின்றார் எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்திய விரிவாதிக்க அரசியல் உளவுத்துறையின் (RAW)- தத்துவார்த்த அறிவு ஜீவிகள், ஈழப்பிரச்சனை குறித்த நிலைப்பாட்டில், ''அரபாத் இல்லாத பாலஸ்தீனமே, ஈழப் பிரச்சனைக்கு தீர்வு`` என்று  கோட்பாடு வகுத்த போது,அவர்கள் ``பிரபாகரன் இல்லாத ஈழமே ஈழப் பிரச்சனைக்கு தீர்வு`` என திட்டம் தீட்டியுள்ளார்கள் என சுட்டிக்காட்டி- RAW ராமனுக்கு கொடும்பாவி எரிக்க அறை கூவினோம்,  அது செவிடன் காதில் ஊதிய சங்காகியது. முள்ளிவாய்க்காலில் ஆனந்தபுரத்தில் விசவாயுத்தாக்குதலில் ஈழத்து அரபாத்துக்களை இந்திய விரிவாதிக்க அரசு சர்வதேச போர் விதிச் சட்டங்களையும் மீறி படுகொலை செய்த போது இது உண்மையாகியது..

ரணில் இந்தப் போர்ப் பாதையில் தான் பயணித்தான். 

ஆக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சூதாட்ட போர்க்களம் வகுத்த ரணில் விக்கிரமசிங்கே போர்க்குற்றவாளியே!

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி கொலை பாதக கோர நாட்களில் மைத்திரி பால சிறிசேனா தான் இராணுவ அமைச்சன்!.

இதனால்  ரணிலும் மைத்திரியும் போர்க்குற்றவாளிகளே!

பொதுத்தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஆட்சிக்கவிழ்ப்பே!

அமெரிக்க இந்திய அரசியல், ரசிய சீன இராணுவ, உதவியில் ஈழ இனப்படுகொலையை நடத்தி முடித்து யுத்தத்தில் வெற்றி கொண்ட பக்சபாசிஸ்டுக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  வீழ்ச்சி நிலையைக் 
கவனத்தில் எடுத்து சீன- ரசிய  சார்பு  வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முயன்றனர்.இதனை முறியடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு திட்டமிட்டன.

மூன்றாவது உலக மறுபங்கீட்டு போர்க்காலத்தில் அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய போர்த்திட்டத்தின் காவல் நாயாக` இந்திய விரிவாதிக்க அரசு கொம்பு சீவி நிறுத்தப்பட்டிருப்பதால், ஏற்கெனவே 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விரிவாதிக்கத்தின் காலனியாகிவிட்ட இலங்கையின் பக்ச பாசிச ஆட்சியாளர்கள் இந்த தேர்வுச் சுதந்திரத்தையும் இறுதியாக இழந்தனர்.

இது மட்டுமல்ல, உலகப் பொருளாதார முறைமையின் ஒரே ஒழுங்கு ஏகபோக நிதியாதிக்க கும்பல்களின் நிதி மூலதன சேவகம் என்று ஆகிவிட்டதால் முன்னர் போல் சிறுவீத உள்ளூர் தொழில் துறை, அந்நிய சார்பு வர்த்தகத் துறை என்கிற இரு உற்பத்தித்துறை சார்ந்த, இரு வர்க்க முகாம்கள் கூட இன்று இல்லை!

இதன் விளைவாகத்தான் இருகட்சி  போலிப்பாராளமன்றவாத ஜனநாயகம் அம்பலமாகி ``ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்`` ஐக்கியப்பட முடிந்தது. `மைத்திரியும் 40`திருடர்களும்` ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவி 
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து மைத்திரி ஜனாதிபதியானார்.இந்தக்கூட்டு பொதுத்தேர்தலிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்கு பெற்று ஆட்சி அமைத்தது.

வெட்கம் கெட்ட முறையில் இதை அவர்கள் தேசிய அரசாங்கம் என்று வேறு அழைக்கின்றனர்.சிங்களம் அரசியல் யாப்பின் படி எப்படி `சோசலிச ஜனநாயக குடியரசோ` அவ்வாறே இது தேசிய அரசாங்கமும் அதன் ஆட்சி நல்லாட்சியுமாகும்!

இதனால் உலக மறுபங்கீட்டில் ரசிய சீன ஏகாதிபத்திபத்திய சார்புப் போக்கை வீழ்த்தி. அமெரிக்க இந்திய சார்பு ஆட்சியாளார்களை அரியணையில் அமர்த்தியது ஆட்சிக்கவிழ்ப்பே!

ஆட்சிக்கவிழ்ப்பும் ஐ.நா.துரோகமும்:

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து தன்னைத் தப்புவித்துக்கொள்ள, சிங்களம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் தனது `அரைக்காகாலனிய சுதந்திரத்தையும்` பலிகொடுத்த செயலாகும்.அமெரிக்க இந்திய நலன்களுக்கு அமைய, பணிந்து சேவகம் புரியும் புதிய காலனியாக ரணிலும் மைத்திரியும் இலங்கையை விலை கூறி விற்றதன் விளைவாக, ஏகாதிபத்திய தொண்டு நிறுவனம் ஐ.நா வும் ஈழ தேசிய இனப்படுகொலைப் போர்க்குற்றத்துக்கு சர்வதேச நீதி விசாரணை கோரிய மக்களுக்கு துரோகம் இழைத்து, கொலையாளிகளையே நீதிபதிகளாக்கி சிங்களத்தின் உள்ளக விசாரணை என்கிற மோசடியை ஏற்று மீண்டும் ஒரு தடவை துரோகமிழைத்தது.ஆரம்பம் முதல் நாம் தொடர்ந்து கூறிவந்த வாறு ஐ.நா.பாதையில் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தருவோம் என மக்களை வழி நடத்திய ஏகாதிபத்திய தாசர்கள் இறுதியில், நட்டாற்றில் விட்டு விட்டனர் ஈழ மக்களை!.

ஆட்சிக்கவிழ்ப்பும் தேசிய ஒடுக்குமுறையும்:

மேலும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு, சிங்களம் ஈழ தேசிய ஒடுக்குமுறையைத் தொடரும் வரை தனது அரைக்காலனிய `சுதந்திரத்தைக்` கூட தக்கவைத்துக் கொள்ள இயலாது என்பதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டாகும். போர்க்குற்றத்தில் இருந்து தப்புவதற்காக சிங்களம் இன்று கொடுத்துள்ள விலை அளப்பரியது.
உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப் போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய சிங்களம் பணிய வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலைக்கு சிங்களம் ஆளானதற்கு மூல காரணம் அது தனது சொந்த ஈழ தேசத்துக்கு ஜனநாயகத்தை வழங்க - சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க என்றும் மறுத்து வருவதே ஆகும்.

நல்லாட்சியும் 2016 நிதி நிலை அறிக்கையும்:

ரணில் மைத்திரி பாசிஸ்டுக்களின் நல்லாட்சி, இலங்கையின் 2016 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுவிட்டது.இதை `மூன்றாவது சீர்திருத்த அலை` என ஏகாதிபத்தியவாதிகள் 
கொண்டாடுகின்றனர்.

முதலாவது அலை - மார்கிரட் தச்சர், ரொனால்ட் ரேகன் கொள்கைகளை தழுவி- எழுபதுகளில் ஜே.ஆர்.ஜெயவர்தனே அமூலாக்கிய `திறந்த பொருளாதாரக் கொள்கை`.

இரண்டாவது அலை- நோர்வே பேச்சுவார்த்தை, ISGA அதிகாரப்பகிர்வு காலத்தில், புலிகளும் ரணிலும் IMF இடம் கடன் வாங்கிய Regaining Sri Lanka திட்டம்.

இந்த மூன்றாவது அலையில்-ஊடகப் பயங்கரவாதிகள் எடுத்துச் சொல்லாத- முக்கிய அம்சம் இராணுவச் செலவினம்:

According to the Appropriation Bill that was tabled in Parliament on Friday, the Government has allocated Rs. 285 billion for the Ministry of Defence for 2015, which is a hike of 12.25% in comparison to this year (2014).
The Defence budget will remain high next year -2016 - also The defence allocation is more than Rs. 306 billion.

அதாகப்பட்டதாவது: `பயங்கரவாதப் போர் 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்று` 5 ஆண்டுகளுக்கு பின்னால், 2014 இல் பக்ச பாசிஸ்டுக்கள் தமது 2015  நிதி நிலை அறிக்கையில் இராணுவச் செலவினத்தை 12.25% ஆல் அதிகரித்தார்கள்.அதன் தொகை Rs. 285 billion ஆகும்.மொத்த தேசிய உற்பத்தியில் இது 2.5% ஐ அண்மித்ததாகும்.இதே விகிதாசாரத்தில் தான் பிரித்தானியாவின் இராணுவச் செலவினமும் இருக்கின்றது!  இது 
போதாதென்று ரணில் மைத்திரி பாசிசம் 2016 ஆண்டுக்கான இராணுவச் செலவினத்தை Rs. 306 billion இற்கு மேலாக (3%) உயர்த்தியுள்ளது!

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 6 ஆண்டு களுக்கு பின்னால் இராணுவச் செலவினத்தில் 15 சத வீத அதிகரிப்பு ஏன்?

 அமெரிக்க இந்திய  ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், அரசியல் அதிகாரத்தை சதித்தனமாக கைப்பற்றிய ரணில் மைத்திரி கும்பல்,  உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்யவே இந்த அதிகரிப்பைச் செய்துள்ளது.
இதனால் இது தேசிய அரசாங்கமும் அல்ல, நல்லாட்சியும் அல்ல என்பதை தானே  நிரூபித்து விட்டது . 

ஆட்சிக்கவிழ்ப்பும் நல்லாட்சி நாடகமும்.

இவ்வாறு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப் போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் உண்மை நிலையை மூடி மறைக்க ஆடும் நாடகம் தான் இந்த `நல்லாட்சி`.இதனால் தான் ஏகாதிபத்திய  பயங்கரவாத ஊடக குற்றவாளிகள் இந்த நல்லாட்சியில், இலங்கையில் ஆறு, குளம், நதி, சமுத்திரம் எங்கும் பாலும் தெளிதேனும் பாய்வதாகவும், மக்கள் பாகும் பருப்பும் உண்பதாகவும், சம்பந்தன் சிங்கக் கொடி பிடிப்பதாகவும்,ஜனாதிபதித் தேர்தலில் புரட்சி நடந்ததாகவும், பாராளமன்றத்தேர்தலில் ஜனநாயகம் மலர்ந்ததாகவும்
கூறிவருகின்றனர்,சோழியன் குடும்பி சும்மா ஆடாது!

நல்லாட்சியும் நாட்டு நடப்பும்:

ரணில் மைத்திரி கும்பலும் ஊடகப் பயங்கரவாதிகளும் நல்லாட்சி பற்றி எவ்வளவு தான் பிதற்றினாலும் நாட்டு நடப்பு அதற்கு மாறாகவே, எதிராகவே உள்ளது.

முள்ளிவாய்க்காலில்  யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக பிரகடனம் செய்த பக்ச பாசிஸ்டுக்களின் பக்கத் துணைவராக இருந்த ரணில் மைத்திரி கும்பல் ஈழ தேசிய அழிப்பை வேறு வகையில் தொடர்ந்து வருகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னால், ஈழ தேசத்தின் முடிவை அறிய ஈழத்தமிழ் வாக்கெடுப்பு நடத்த அது மறுத்து வருகின்றது.

போர்க்குற்றவாளிகளான தம்மீது நீதி விசாரணையைத் தவிர்க்க முழு நாட்டையுமே அமெரிக்க இந்திய அணிக்கு விலை கூறி விற்றுவிட்டது.

போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை.

வாழ் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை.

ஈழக் கடல் தொழிலாளர்கள் வாழ முடியவில்லை.

ஆகமொத்தம் ஈழ தேசத்தின் விவசாயப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.

ஈழ தேசிய இன ஒடுக்குமுறை யுத்தம் உருவாக்கிய சமூகப் பிரச்சனைகளில் எவையும் தீர்க்கப்படவில்லை.

மாறாகா தீவிரப்படுத்தப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்றது.போதை வஸ்து பாவனை அதிகரித்துள்ளது.வக்கிரப் பாலியல் (PONOGRAPHI), பரவி வருகின்றது, ஈழ வித்தியா இவ்வாறு தான் வக்கிரப் பாலியல் படப்பிடிப்பு வர்த்தகத்துக்கு பலியாகி படுகொலை செய்யப்பட்டாள், இதில் இளம் சந்ததியினர், மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர், இராணுவ முகாம்கள் விபச்சார விடுதிகளாக உள்ளன.இவை தவிர்ந்த அரசியல் வாதிகளின் விபச்சார விடுதிகளும் உள்ளன.அனந்தி  இவர்களை கையும் களவுமாக கைப்பற்றி அம்பலப்படுத்தியுள்ளார். இவை சிங்களத்தின் அரசதிகார பலத்துடனேயே நடந்தேறி வருவதாக வடக்கு மாகாண முதல்வர் தொடர்ந்து கூறி வருகின்றார்.

முற்றும் துறந்த பாதிரிகள் தங்கள் மறை ஆசிரையை பாலியல் பலாத்காரம் செய்து பாழ் கிணற்றில் வீசுகின்றனர், ராமதாஸ் பாணியில்! ஒரு சிவில் சமூகமும் குரல் எழுப்பவில்லை தமது திருத் தந்தையர்களுக்கு எதிராக!நாதியற்றுக் கிடக்கின்றது சட்டம் ஒழுங்கு!! சிங்கள மாணவர்கள் போராடினால் மட்டும் நையப்புடைக்கின்றது.

யுத்தக் கைதிகள் பிரச்சனை கூட இன்னமும் தீர்வு காணப்படவில்லை.


இனப்படுகொலை யுத்தத்தின் இறுதி நாட்களில் போராளிகளை சரணடையுமாறு சிங்களம் கோரியது.அமெரிக்க அதிபர் ஒபாமா `விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும்` என  பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு இலட்சத்து அறுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்களின் இனப்படுகொலை, விடுதலைப் புலிப் படையின் முக்கிய கள முனைத் தளபதிகள் குழு மீதான விச வாயுத் தாக்குதல், யுத்த தர்மம் அனைத்தையும் மீறி சிங்களம் இழைத்த போர்க்குற்றங்கள், இந்திய விரிவாதிக்க அரசு,அதனது தமிழக இன மானத் தொண்டர்கள்- புற முதுகில் குத்திய எண்ணற்ற செயல்கள், புலம் பெயர் தமிழ் விதேசிகளின் துரோகம்,நமது சொந்தத் தவறுகள்,  இவற்றின் இணை விளைவாக ஆயுதங்களை மெளனிக்கும் விடுதலைப்புலிகளின் அறிவிப்போடு யுத்தம் தற்காலிகமாக ஒய்ந்தது.

யுத்தம் ஓய்ந்த கையோடு யுத்தத்தின் அரச எதிர்ப்பு, நீதி யுத்தத்  தரப்பினராகிய விடுதலைப் புலிப் போராளிகள் அனைவரும் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும், அது தான் சர்வதேச நியதி.

இரண்டு பெரும் உலக யுத்தங்களிலும், வியட்னாம் யுத்தத்திலும் இவ்வாறுதான் நடந்தது.

வியட் கொங் மக்கள் படையால்,அமெரிக்க போர் விமானத்தில் இருந்து தவறுதலாக  சறுக்கி விழுந்த ஒரு  அமெரிக்க `போர்வீரன்` யுத்தக்கைதி என்கிற அடிப்படையில் விடுதலை  செய்யப்பட்டான்!

இந்த ஜென்மம் இப்போதும் படு பிற்போக்கு யுத்த வெறிப் பிரச்சாரகராக திகழ்கின்றது.

ஆனால் சிங்களம் போர்க் கைதிகளையும் படுகொலை செய்தது.பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.

நல்லாட்சி நாடகமாடும் ரணில் மைத்திரி பாசிச ஆட்சி, ஆறு ஆண்டுகள் கடந்தும் எஞ்சியுள்ளவர்களை விடுதலை செய்ய மறுத்து வருகின்றது.

இவர்களில் 217 பேர் கடந்த மாதம்சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சிறைக் கூடங்களுக்குள் ஆரம்பித்தனர்.இப் போராட்டத்தை `சம்பந்தன் சுமந்திரன் சேனாதி` துரோகக் கும்பல் போலி வாக்குறுதி அளித்து முறியடித்தது.

சம்பந்தன் கைதிகளை வகைப்படுத்துகின்றான், அதில் முதல் வகையினர் ``பாரதூரமான குற்றம் இழைத்தவர்கள்``!

இதனால் போராளிகள் தம் அனைவரதும் (217), உடனடி விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை சிறைக்கூடங்களுக்குள் ஆரம்பித்தனர், தம்மை மீட்க போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.

போராளிகளின் இந்த அறைகூவலை ஏற்று 13-11-2015அன்று தமீழ மக்கள் கதவடைப்புப் போராட்டத்தில் இறங்கினர்.

அம்பாறை,திருகோணமலை,மட்டக்களப்பு,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,மலையகம் அடங்கலாக தமிழீழம் தம் வேங்கைகளை மீட்க வெறிச்சோடியது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் மீண்டும் தமிழீழம் ஓரணியில் திரண்டது,திரட்டியவர்கள் யுத்தக் கைதிகளான விடுதலைப் புலிப் போராளிகள்.

இப்போதும் காதடைத்த சிங்களம், இந்த ஈழக் கதவடைப்புக்கு காது கொடுப்பதாகத் தெரியவில்லை.வழக்கம் போல போலி வாக்குறுதி அளித்து காது குத்தவே முயலுகின்றது.

எனவே `217, விடுதலை இயக்கத்தில்` நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.

முதலாவதாக, நாம் ஈழ தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் கட்டிக் காக்க வேண்டும்.ஓரணியில் திரட்ட வேண்டும்.

இரண்டாவதாக,நாம் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் அடிப்படையில் சார்ந்து நிற்க வேண்டும்.

மூன்றாவதாக, நாம் தொடர்ந்து போராட வேண்டும்,போராட்டத்தை பரவலாக்க வேண்டும்,தீவிரப்படுத்த வேண்டும்.

நான்காவதாக, இத்தனியொரு குறிக்கோளுக்காக சாத்தியமான அனைத்துச் சக்திகளோடும் ஐக்கியப்படவேண்டும்.

தென்னிலங்கையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு குரல் எழுகிறது.யாழ்ப்பாணத்தில் - 217 விடுதலை இயக்கத்தில்- இஸ்லாமியத் தமிழர்கள் இணைந்துள்ளனர்.இஸ்லாமிய சிறு உடமை வியாபாரிகளின் பங்களிப்பு இல்லாமல் ஈழக்கதவடைப்பு போராட்டம் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.முடியவே முடியாது!தமிழகத்தில் கடந்த வாரம் இண்டூரில் நடை பெற்ற ஈழ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் ம.ஜ.இ.கழகத்தின் பிரதான பேச்சாளர் தோழர் மனோகரன், ஈழ யுத்தக் கைதிகள் விடுதலைக்கு குரல் எழுப்பி ,கழகம் சார்பாக தமிழக மக்களை தட்டி எழுப்பினார்.

ஒருகணம் நமது கொள்கை கோட்பாடுகளை யெல்லாம் துறந்த துறவிகளாகி மனித உரிமையாளர்களாக மாறி  நியாயம் கோரக் கூடுமெனில் கூட,  தன் ``காணாமல் போன`` தமையனுக்காக கதறி அழுத ஜெசிக்காவையும் அவளுக்கு ஒரே அடைக்கலமான தாயையும் இன்னமும் ஏன் பிரித்து வைத்து இருகின்றீர்கள் ? இவர்களால் உங்களது தேசிய பாதுகாப்புக்கு என்ன அச்சுறுத்தல்?  நாசமாகுக இந்த நல்லாட்சி!  

மக்களைச் சார்ந்து நின்று போராடினால் `217 விடுதலை இயக்கத்தில்`  நாம் வெற்றி பெறுவது திண்ணம்.

ஆட்சிக் கவிழ்ப்பும் சம்பந்தன் கும்பலின் காட்டிக் கொடுப்பும்:

நாம் ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத்தேர்தலையும் புறக்கணிக்குமாறு பகிரங்கமாக கோரினோம்.ஏறத்தாள பாதியளவு மக்கள் புறக்கணித்தனர். எஞ்சிய வாக்குகளில் கூட்டமைப்பு கும்பல் ஆசனங்களைப் பெற்றது.இது ரணில் மைத்திரியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.பக்ச பாசிஸ்டுக்கள் இடது சாரி ரொட்ஸ்கியவாதி வாசுதேவ நாணயக்காராவை அணைத்துக் கொண்டது போல,நல்லாட்சியின் அலங்காரப் பொம்மையாக ரணில் மைத்திரி பாசிசம் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கியது! 

கேவலம் இந்த எதிர்க்கட்சித் தமிழ்த் தலைவன் ஆகக் குறைந்தபட்சம் போர்க்கைதிகளின் விடுதலையைக் கூட சாதிக்க வில்லை.மாறாக இவனது கொழும்பு கூட்டமைப்பு அவர்களது ஜீவ மரண சிறைவாசப் போராட்டத்தை தொடர்ந்து முறியடித்து வருகின்றது.

உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் தொங்கு சதையாக சம்பந்தன் கூட்டமைப்பு கும்பல் மாறி விட்டது.

மதியப் பொழுது மறைவதற்கு முன்னால் மைத்திரிக்கு வாக்கிடக்கோரிய மனித உரிமை மனோ கணேசனும் யுத்தக்கைதிகள் விவகாரத்தில் கை விரித்து விட்டார்.

கூட்டமைப்பு கும்பலும் ஈழதேசிய பிரச்சனைத் தீர்வும்.

உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் தொங்கு சதையாக சம்பந்தன் கூட்டமைப்பு கும்பல் மாறி விட்டதால் அதன் ஈழ தேசியப்பிரச்சனைக்கான தீர்வும் அந்த முகாமின் நலன்களுக்கு அடங்கியிருப்பது தர்க்க பூர்வமானதே.

இதனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னாலும் கூட்டமைப்புக் கும்பல் 13 வது திருத்தத்திற்கு அமைந்த அதிகாரப் பகிர்வு என்று பம்மாத்து நாடகம் ஆடி இந்திய விரிவாதிக்கத்துக்கு சேவகம் செய்கின்றது.

இதைக் கூட்டமைப்பு மட்டும் செய்யவில்லை, பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட,புலம் பெயர் பேரவைகளும் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , EXCELL  வீரர்களும், பாதிரிகளும் இணைந்தே செய்கின்றார்கள்.இதனால் தான் நல்லாட்சி இவர்கள் மீதான தடையை நீக்கியுள்ளது!

இவர்கள் தமது சொந்த வர்க்க நலனில் இருந்தும், ஏகாதிபத்திய தாச விதேசிய மனப்பான்மையில் இருந்தும் ஈழதேசிய சுய நிர்ணய உரிமைப் பிரச்சனையை பேரப்பொருளாக்கி வருகின்றனர்.

இத்துரோகத்தை முறியடிக்க  முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பின்னால் ஈழ தேசத்தின் முடிவை அறிய ஈழத்தமிழ் வாக்கெடுப்பு நடத்தக் கோரி, தேசம் தழுவிய வெகு ஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவது இன்றைய உடனடி அவசியக் கடமை ஆகும்.

ஈழ தேசிய ஒற்றுமையே இதன் ஆதாரத்தூண் ஆகும்.

வெகுஜனப் போராட்டப் பாதையே விடுதலைப் பாதை!

கைதிகள் முதல் கைம்பெண்கள் வரை ஈழத்தில் மக்கள் போராடுகின்றார்கள். வடக்கு கிழக்கு மலையகம் தழுவிய  -ஈழதேசிய யுத்தக் கைதி விடுதலை கதவடைப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.மீள் குடியேற்றத்துக்காகவும்,காவு கொடுத்த உதிரங்களை மீளப் பெறவும் ஈழ மக்கள் போராடுகின்றனர்.விவசாயிகள் போராடுகின்றனர்,கடற் தொழிலாளர் போராடுகின்றனர்,மலையக மக்கள் போராடுகின்றனர்,கறுப்பு ஓகஸ்ட் சமூக நீக்க கொடுமைக்கு நீதி கோரி இஸ்லாமியத் தமிழர்கள் போராடுகின்றனர். தென் இலங்கையில் மாணவர் போராட்டங்கள் தன்னியல்பாக வெடிக்கின்றன.இவை கல்வியில் அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்கக் கோருகின்றன,இதனால் விதேசிய ரணில் மைத்திரி ஏகாதிபத்திய நலன் ஆட்சி,மாணவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்குகின்றது.உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக்களை எதிர்த்து உலகமெங்கும் வெகுஜனப் போராட்டப் போர்ப்புயல் வீசி வருகின்றது. 

இந்த உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் ஆதார சக்திகளாகக் கொண்டுதான் ஈழதேசிய விடுதலைப் புரட்சி இயக்கம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் தனது அடுத்த காலடியை முன் வைக்க வேண்டும். 

மாறாக ஏகாதிபத்திய அமெரிக்கா,விரிவாதிக்க இந்தியா,ஏகாதிபத்திய பஞ்சாயத்து மன்றம் ஐ.நா.வை நம்பியோ,ரணில் மைத்திரி பாசிஸ்டுக்களோடு பின்கதவு உறவு கொண்டு, உண்டு குடித்தோ,`சிவில் சமூகம்` என்கிற பெயரில் அந்நிய NGO களோடு கள்ள உறவு கொண்டு, தமிழர்களுக்கு  வலை விரித்தோ  அல்ல.

தகரும் நிலையில் ஏகாதிபத்தியமும் அதன் தலைமை நாடான அமெரிக்காவும்.

`ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாகும். அதாவது அந்திமக்கால முதலாளித்துவம் ஆகும்.` இதுதான் லெனின் விஞ்ஞான வரையறை. முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையின் அடிப்படை, பண்ட உற்பத்தியாகும்.பண்ட உற்பத்தியின் ஒரே குறிக்கோள் அதிக இலாபம். இந்த அதிக இலாபம் அபரிமிதமான உற்பத்திக்கும், அபரிமிதமான உழைப்புச் சக்தியின்  சுரண்டலுக்கும் தவிர்க்க இயலாமல் இட்டுச் செல்கின்றது.இதன் விளைவு என்னவென்றால் சந்தையில், 

`நுகர்வோரின் வாங்கும் வலிமையை தகர்க்கும் உழைப்புச் சக்தி சுரண்டலும், இதனால் வாங்கும் சக்தியை தொடர்ந்து இழந்து வரும் அவர்களுக்கே அபரி மித உற்பத்திப் பண்டங்களை விற்றுத் தீரவேண்டியதும்` 

ஆன  தீர்க்க முடியாத முரண்பாட்டுக்குள் சிக்கிக் கொள்வதாகும்.இதைத் தீர்ப்பதற்கான ஏகாதிபத்தியவாதிகளின் தீர்வும் திட்டமும் தான் உலக மறுபங்கீடும்,பிராந்திய உலகப் போரும்!

இவ்வாறு அமெரிக்கா,மூன்றாவது உலகமறுபங்கீட்டு போர்க்கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து சிரியா வரை வந்து, சிக்கிக் கொண்டுள்ள நிலை, இவை தீர்வு அல்ல தகர்வு என்பதையே நடைமுறையில் நிரூபித்து நிற்கின்றது.

ஆக தகரும் ஏகாதிபத்தியத்தை நமது வல்லமைக்கு உட்பட்டு தாக்கி அழிக்க வேண்டுமே ஒழிய தாங்கிப் பிடித்து தற்காக்கக் கூடாது.

எனவே எந்த தேசிய விடுதலை இயக்கமும் போலவே ஈழப்புரட்சிகர தேசிய விடுதலை இயக்கமும் தனது குரலை சிங்களத்துக்கு எதிராக மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் இந்திய விரிவாதிக்கத்துக்கு எதிராகவும்,ஒலித்துத் தீர வேண்டும் என்பது புரட்சியின் விதியாகும். இதற்கான வல்லமை ஈழ தேசிய ஒற்றுமையில் தான் தங்கியுள்ளது.

வெற்றிக்கான ஆயுதம்
ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவோம் என்கிற முழகத்தின் அடிப்படையில், வகுக்கப்பட்ட புரட்சிகர செயல் தந்திர திட்டத்தின் மீது அமைந்த அரசியல் பிரச்சார கிளர்ச்சி நடவடிக்கைகளே எமது வெற்றிக்கான ஆயுதமாகும்.

ஈழதேசிய ஒற்றுமை

இக்கோட்பாட்டு அடிப்படையில் மட்டுமே ஈழ தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும்.

எனவே ஈழவிடுதலைப்புரட்சியின் எதிரிகளான அமெரிக்கா முன்னிட்ட ஏகாதிபத்தியவாதிகளையும்,இந்திய விரிவாதிக்க அரசையும்,சிங்களத்தையும் எதிர்த்து, கூட்டமைப்பு,புலம்பெயர் பேரவைகள், இனமானம் பேசும் தமிழக இந்திய விரிவாதிக்க தரகர்கள் அடங்கிய சமரச சக்திகளை தனிமைப்படுத்தி,ஈழதேசிய ஒற்றுமையைக் கட்டிக் காத்து உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுபட்டு, மாண்ட நம் மக்களதும் மாவீரத் தோழர்களதும் ஒரே கனவான ஈழ தேசத்தை விடுவிக்க பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் ஓரணி திரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.



புதிய ஈழப் புரட்சியாளர்கள்              தமிழீழம்           27-11-2015
செழுமை 06-12-2015

No comments: