Monday 21 July 2014

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி (4) - மதப்பிளவுக்கு துணை நிற்கும் தமிழ்ச் சமூக வர்க்க சக்திகள்.

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி 4

மதப்பிளவுக்கு துணை நிற்கும் தமிழ்ச் சமூக வர்க்க சக்திகள்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை நாடு தழுவிய மத மோதலாக மாற்றுவதே மோடிப் பாசிசத்தினதும்,பக்ச பாசிசத்தினதும் புதிய திட்டம்.

மோடி ஆட்சி தனது பதவியேற்பு வைபவத்திற்கு `சார்க் நாடுகளோடு சகோதரத்துவம்` என்கிற போர்வையில் ஈழத்தமிழ் இனப் படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு செங்கம்பள வரவேற்பளித்தது.திரை மறைவில் பேசப்பட்ட விடயங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.ஆனால் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு `13 இற்கு மேல்` தீர்வுக்கு வலியுறுத்தியதாக, தரகுத்தமிழ் அணியும் அவரகளது ஊதுகுழல் ஊடகங்களும் ஓயாது முழங்கின!

`13 இற்கு மேல்` என்கிற அடிமைத் தளையை ஈழத்தமிழர் மேல் திணிப்பதன் மூலம் ஒரு புறம் இலங்கை அரசை-சிங்களத்தை- பொறிந்து விழாமல் பாதுகாத்துக் கொண்டும், மறு புறம் ஓடுகாலிகளையும், தமிழ்த்தரகு அணியையும் தனது சமூக ஆதரவாக்கிக் கொண்டு, `தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண` முயல்வதாக நாடக மாடிக்கொண்டு இலங்கையின் மீது தனது மேலாதிக்கத்தை விரிவாக்க, ஈழ தேசியப் பிரச்சனையை மத மோதல்களை தூண்டி சீரழித்து சிதைப்பதே மோடி ஆர்.எஸ்.எஸ் பாசிச ஆட்சியின் புதிய திட்டமாகும்.

பிரித்தானிய காலனியாதிக்கவாதிகள் கற்றுக் கொடுத்த `பிரித்தாளும் தந்திரத்தை` அவர்களது அரைக்காலனிய சேவகர்கள் இந்திய விரிவாதிக்கத்துக்கான ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். 1987 இல் காங்கிரஸின் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தமிழர்களை சாதி ரீதியாக பிளவு படுத்தி, தமிழ்த்தேசிய புலிகள் இயக்கத்தை தோற்கடிக்கலாம் என்று கனவுகண்டது.இதற்காக EPRLF அமைப்பைப் பயன்படுத்த முயன்று படு தோல்வி கண்டது. ``மத்தாளோடைப் பத்மநாபா`` இந்திய ஆக்கிரமிப்பின் கூலிப்படைத் தலைவன் ஆனார்.

 இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களில் ஒன்றான காங்கிரஸ், ஈழ தேசிய இயக்கத்தை பிளவுபடுத்தி அழிக்க `சாதி` என்கிற ஆயுதத்தை ஏந்தியது என்றால், அதன் மறு முகமான பி.ஜே.பி மதம் என்கிற ஆயுதத்தை ஏந்திவருகின்றது.

ஈழ சமூகத்தில் மத முரண்பாடு கூர்மையானதாகவோ, பிரதானமானதாகவோ, இயற்கையாக இல்லாத போதும், எளிமை நிலையில் உள்ள முரண்பாட்டை செயற்கையாக முன்னிலைப் படுத்துவதற்கான சமூகக் கூறுகளும்,சமூக சக்திகளும்,நிறுவனங்களும் உள்ளதைப் புறக்கணிக்க முடியாது.இதைச் செயற்கையாகத் தூண்டி மோதல்களை உருவாக்குவதற்கான புறவய வாய்ப்புகளையும் நிராகரிக்க முடியாது.

அவையாவன:

1)  அமிர்தலிங்கம் தமிழும் சைவமும் நமதிரு கண்கள் என்று பேசி வந்த தலைவர்.சமஸ்டிக்கட்சியின் தேர்தல் சின்னமாக முதலில் சிபார்சு செய்யப்பட்டது `பசு` ஆகும்,பின்னால் இது வீடாக மாற்றப்பட்டது.இது வாக்கு வேட்டைக்கு செய்த திருத்தமே தவிர கொள்கைத் திருத்தம் அல்ல.
2) சமஸ்டிக்கட்சியின் கொடி `பச்சை மஞ்சள் சிவப்பு` வர்ணங்களைக் கொண்டதாகும்.இதில் பச்சை நிறம் இஸ்லாமியத் தமிழர்களைப் பிரதி நிதித்துவம் செய்தது. யாழ்ப்பாண/மன்னார்  பாரம்பரிய வாழ் நிலத்தில் இருந்து 24 மணி நேர கட்டாய இராணுவ உத்தரவில் இஸ்லாமியத் தமிழர்களை விரட்டியடித்து நாடு கடத்திய `விடுதலைப் புலிகள்` தமிழர்களின் அரசியல் வரலாற்றின் வர்ணங்களில் இருந்து பச்சை நிறத்தை அடியோடு நீக்கி விட்டார்கள்.புலம்பெயர் தமிழர் இயக்கமும், கூட்டமைப்பும், இந்தக் கறையை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.
3)விக்னேஸ்வரன் ஓய்வு பெற்ற நீதிபதி. சட்டக் கல்வித் துறை சார்ந்தவர்.வடக்கு மாகாணத்தின் அனைத்து மதப் பிரிவு மக்களிடையே இருந்தும் பெரும்பான்மை வாக்குகளால் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டு, வடக்குத் தமிழர்களின் ஜனநாயகப் பிரதிநிதி சர்வதேச சமூகத்தால் போற்றப்பட்டவர். இவரது பதவியேற்பு வைபவத்தில் இவருக்கு விநாயகர் விக்கிரகத்தை பரிசளித்தார் ஐக்கிய இலங்கையின் ஜனாதிபதி!இதன் குறி பொருள் என்ன?
4)யாழ்பாணப் பல்கலைக் கழக - `அறிவாலயத்தின்` சின்னம் இப்போதும் நந்திச் சிலை தான்.யாழ் பொது சன நூலக வாசலில் -மற்றொரு அறிவாலய வாசலில் வெள்ளைத் தாமரை யில் சரஸ்வதி தான் வீற்றிருக்கின்றாள்.கம்பர் வருதி ஜெயராஜா மோடிக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றார்.`இந்திய இலங்கை இந்து மக்கள் முன்னணி` என்கிற அமைப்பு ஒன்று மோடிக்காக நல்லூர் கோவிலில் ஜெபிக்கின்றது.
5) கொழும்பில் கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக -அதாவது கிறீஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிராக- இந்து மன்றம் பெளத்தபல படையணியோடு கூட்டமைத்து கண்டன ஊர்வலம்- போராட்டம்- நடத்துகின்றது.
6)BJP ஆதரவு  NDTV (New Delhi Television) இலங்கையில் பெளத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் பொது வழிபாட்டுத் தெய்வமாக கண்ணகி இருப்பதாக `ஆவணத்திரைப்படம்` ஒன்றை வெளியிட்டு வருகின்றது.பா.ஜ.கட்சி ஈழத்தமிழகளுக்கு என்றும் ஆதரவாக இருக்கும் என்று கூறுகின்ற அக்கட்சியின் தமிழகத் தலைவர் பொன்.இராதாகிருஸ்ணன், தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறை குறித்தோ, இனப்படுகொலை குறித்தோ, போர்க்குற்றம் குறித்தோ ஒரு வரி கூடப் பேசுவதில்லை, மாறாக ``அங்கு இந்துக் கோவில்கள் சிங்களவர்களால் தாக்கி அழிக்கப்படுவதாக`` அழுகின்றார்! நவாலித் தேவாலயப் படுகொலைக்கும், புத்தளம் பள்ளிவாசல் படுகொலைக்கும் இவரது பதில் என்ன? இலங்கையின் தலைமை இந்துக் கோவில்கள்  தமிழ் நாட்டுக் கோவில்களுடன் தொடர்புடையவை.

இவை அனைத்தும் தமிழர் எழுச்சிக்கு எதிராக, ஒரு இந்து எழுச்சியை கட்டியெழுப்பும் முனைப்பையே சுட்டிக்காட்டுகின்றன.

இதை முளையிலேயே கிள்ளியெறியத் தவறினால்  ஒரு புறம்  பிரதேச ரீதியான துண்டாடலும்,மறுபுறம் மத சமூக அடிப்படையிலான மோதலுமாக தமிழீழத்துக்கான பொருளாயத அடித்தளம் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுவிடும்.

இது வரலாற்றை பின்னோக்கி தள்ளும் முயற்சி எனினும், இதை எதிர்த்து முறியடிக்கத் தவறினால் தற்காலிகமாகவேனும் இந்தப் பிற்போக்கு வெற்றி பெறுவது சாத்தியமே.

இதைக் கூட்டமைப்பைக் கொண்டோ, தமிழ்த் தரகு அணியைக் கொண்டோ சாதிக்க முடியாது,இதற்கு ஒரு புரட்சிகர ஜனநாயக முற்போக்கு முன்னணிப்படை அவசியம்.அத்தகைய ஒரு படையால் மட்டுமே இன.மத,சாதிய,பிரதேச பிளவுகளைக் கடந்து அனைத்துப் பிரிவினரிடையேயும் உள்ள உழைக்கும் மக்களை ஈழ தேசிய விடுதலை புரட்சியில் இணைக்க முடியும்.

இத்தகைய ஒரு அணி மட்டுமே தமிழகத்தில், இந்திய விரிவாதிக்க தமிழ்த் தரகுச் சமரச துரோகிகளுக்கு மாற்றாக, தமிழகத்தின் மக்கள் ஜனநாயக இயக்கத்துக்கு துணை நின்றும், அதன் துணையோடும் ஈழவிடுதலையை வென்றெடுக்க வல்லதாகும்.இலங்கையில் சமூக மாறுதலை,ஈழவிடுதலைப் புரட்சியை தொடர்ந்து நசுக்கி வரும் இந்திய விரிவாதிக்கத்தை வெற்றி கொள்ள தமிழகத்தில் ஒரு புரட்சிகர மக்கள் ஜனநாயக இயக்கம் அவசியத் தேவையாகும்.

`காங்கிரஸ் கருங்காலி நெடுமாறன், சி.ஐ.ஏ.உளவாளி வை.கோ, பதவிப் பித்தன் சீமான், சாதி வெறியன் ராமதாஸ், ஆளும் வர்க்க ஓட்டுப் பொறுக்கி தி.மு.க, அ.தி.மு.க மற்றும் இத்தியாதி, இந்திய விரிவாதிக்க ஆதரவு அணியில் எதைச் சார்ந்து நின்றும் ஈழவிடுதலையை வென்றெடுக்க முடியாது.

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் முதுகில் குத்திய ``தொப்புழ் கொடி உறவின்``, ``தாய்த் தமிழகத்தின்`` சங்கார துரோகத்தை ஈழம் மன்னிக்காது, மறக்காது.

ஈழப்புரட்சி ஜனநாயகப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது. இனிமேல் இதனை எந்த சக்தியாலும் அடக்க முடியாது.

மோடிப்பாசிசமும், பக்ச பாசிசமும் ஈழதேசிய ஜனநாயகப் புரட்சி இயக்கத்தை, `மத வெறித் தாக்குதல்களால்` முறியடிக்கும் சதியை, ஈழ-தமிழக மக்கள் ஜனநாயக இயக்கத்தால் மட்டுமே முறியடிக்க முடியும்.

No comments: