Monday 21 July 2014

மோடி ஆட்சியும் ஈழப்புரட்சியும் பகுதி (3) புதிய ஆயுதம் மத மோதல்.

மோடி ஆட்சியும் ஈழப் புரட்சியும் பகுதி 3


ஈழ தேசிய இன ஒடுக்குமுறையில் எதிரிகளின் 

புதிய ஆயுதம் மத மோதல்.

இலங்கை அரைக்காலனியாதிக்க அரசானது தான் ஏகாபதிபத்திய சுரண்டலின் உறுஞ்சு குழலாக இருப்பதை மூடிமறைக்க, உள்நாட்டு மக்களை இடையறாது மோதவிட்டு வருகின்றது.ஏகாதிபத்திய சுரண்டலை எதிர்த்து, அதற்குக் காரணமான இலங்கை அரசை எதிர்த்து, ஒரு மக்கள் ஜனநாயகப் புரட்சித்  திட்டத்தில் அனைத்து மக்களும் ஒன்று படுவதைத் தடுப்பதற்காகவே இன,மத,மோதல்களைத் தூண்டி வருகின்றது.இதில் இனப்பிரச்சனை பிரதான வடிவமெடுத்து இலங்கையின் அரைக்காலனிய அரசுமுறையே இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டது.இதனால் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்துக்கு  பிரிவினை தவிர்க்க இயலாததாக்கியதால் பிரிவினை தவிர்க்க இயலாததாகியது. தமிழீழ விடுதலைப் போர் வெடித்தது.30 ஆண்டுகால விடுதலை யுத்தம் முள்ளிவாய்க்காலில் முறியடிக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை வெற்றி கொண்டுவிட்டதாக சிங்களம் பிரகடனம் செய்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டது!

இன ஒடுக்குமுறையின் புதிய ஆயுதம் மத மோதல்.

ஆனாலும் இன ஒடுக்குமுறையைக் கை விடவில்லை.இன ஒடுகுமுறையின் புதிய வடிவமாக தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தி மோதவிடும் தந்திரம் பின்பற்றப்படுகின்றது.

2002 பேச்சுவார்த்தையில் `மத்தியஸ்த்துவம்` வகித்த நோர்வே நாட்டிற்கு எதிராகவும்,ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்காவுக்கு எதிராகவும்,இன வெறி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கொடும்பாவிகள் எரித்து தம்மை தேசபக்தர்களாகக் காட்ட முயன்ற போதும், இந் நாடுகளை `கிறீஸ்தவ` நாடுகள் என்றுதான் வசதியாக வரையறை செய்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக `தமிழ்ப்பயங்கரவாதிகளாக` இருந்த புலிகள் இப்போது கிறீஸ்தவ பயங்கரவாதிகள் ஆகி விட்டனர்.

நமது இடது சாரிகள் `தேசிய முதலாளித்துவ` சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் அமைத்த முற்போக்கு கூட்டணியின் 1972 குடியரசு அரசியல் யாப்பு, பெளத்த மதத்தை அரச மதமாகவும், அதைப்பாதுகாத்து பராமரிப்பதுஅரசின் பொறுப்பு என்றும் கூறி தன்னை `இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு` என மானங்கெட்ட விதமாகப் பிரகடனம் செய்தது.

பக்ச பாசிஸ்டுக்களின் முழுப் பாதுகாப்பிலும்,பராமரிப்பிலும், கோத்தபாயாவின் தலைமையிலும் கீழ்தான் -(சிங்கள மொழியில்) பொ(B)து பல சேனா என அழைக்கப்படும்- பெளத்த பலத்தின் படையணி என்கிற போதிப் பாசிசப் படை ஊட்டி வளர்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு இந்தப் போதிப்படை முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது.ஹலால் உணவு எதிர்ப்பு, மசூதிகள் மீது தாக்குதல், முஸ்லீம் சிறு வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் என களமிறங்கியது. களுத்துறை மாவட்டத்தில் அளுத்கம, பேருவளை நகரங்களில் கலவரத்தைக் கட்டவிழ்த்தது.இஸ்லாமியத் தமிழர்களை படுகொலை செய்தது, சொத்துக்களை சூறையாடியது,தீக்கிரையாக்கியது.மக்களை அகதிகளாக்கியது.

புகைப்படங்கள்,ஒளி நாடாக்கள், ஒளிப்பதிவுகள்,CCTV பதிவுகள்,கண் கண்ட சாட்சியங்கள் என எல்லாமிருந்த போதும்,இதுவரையில் ஒரு காவிக் காடையனாவது நீதியின் முன் நிறுத்தப்படவில்லை!அரசதிகாரத்தின் உதவியுடனும்,அரசமைப்புச் சட்ட பாதுகாப்புடனும்,இந்தப் பெளத்த பலத்தின் பாசிசச் சேனை, இலங்கையின் சிவசேனையாக ஊட்டி வளர்க்கப் படுகின்றது.இந்தப் பாசிசக் காவிக் கும்பலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பக்ச பாசிஸ்டுக்கள் புறந்தள்ளி வருகின்றனர்.

 மோடி ஆட்சியும் தேசிய இனப்பிரச்சனையும்.

இத்தகைய ஒரு சூழலில் தான் மோடி - ஆர்.எஸ்.எஸ்- பாசிசம் இந்தியாவில் ஆட்சிபீடம் ஏறியுள்ளது.குஜராத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் இரத்தம் குடித்தவன் மோடி.பாபர் மசூதியைத் தரைமட்டமாக்கிய இந்து மதவெறிப் பாசிசக் கட்சி பி.ஜே.பி.ஆர்.எஸ்.எஸ், சிவசேனைக் காவிக் கும்பல் ஆலயம் ஆலயமாகச் சென்று பாதிரிப் பெண்களை நரபலி எடுத்தவர்கள்.Face Book இல் இனந்தெரியாத ஒருவர் சிவசேனா நிறுவனர் பால் தக்காரையும், சக்கராதிபதி சிவாஜியையும்,அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் பதிவிட்டதற்கு எதிராக காட்டுத் தர்பாரில் இறங்கியது இந்து மத வெறிக்கும்பல்.இந்தக் கபளீகரத்தில் சாலையோரமாகச் சென்ற ஒரு 24 வயது இளைஞன் தாடி வைத்திருந்த ஒரே காரணத்துக்காக இஸ்லாமியன் என அடையாளம் காணப்பட்டு, 25 பேர் அடங்கிய ஒரு கும்பல் சாகும் வரை அடித்து நொருக்கி நரபலி எடுத்துள்லது.தாமரை மலர்ந்ததும் தலைகள் உருளத் தொடங்கி விட்டன!தளிர்கள் உலர்கின்றன!! ஆட்சிக்கட்டில் ஏறிய ஒரு வாரத்துக்குள்ளாவே இந்தக் கொலை வெறித் தாண்டவத்தை அரங்கேற்றியுள்ளது மோடிப்பாசிசம்.

ஜம்மு காஸ்மீர் மகாராஜாவை மிரட்டி அம்மாநிலத்தைக் கட்டாயமாக இணைத்த `சுதந்திர` இந்தியாவின் அரசியல் யாப்பு, வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத சிறப்புச் சலுகைகளை அரசியல் யாப்பில் உத்தரவாதம் செய்திருந்தது.இதுவே சரத்து 370 (Article 370) எனப்படுவதாகும். 1947-1948 முதல் இருந்து வரும் இப்பிரிவை விவாதிப்பது என்ற போர்வையில் நீக்குவதற்கு முயல்கின்றது மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிச ஆட்சி.

ஜம்மு காஸ்மீர் மாநிலத்தை பாகிஸ்தானும், இந்தியாவும் பங்குபோட போட்டியிடும் சூழலில், அந்த மாநிலம் முழுமையும் இந்தியாவின் பிரிக்க இயலாத பகுதி என இந்திய விரிவாதிக்கம் அடம்பிடித்து வருகின்றது.இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை இதுவரையும் ` பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட காஸ்மீர்` என அழைத்து வந்தது. அதனை இப்போது  ` பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட ஜம்மு காஸ்மீர்` என மாற்றியமைத்துள்ளது.

இதன்மூலம் இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம் செய்த சிறப்புப் பாதுகாப்புகளை நீக்கி முழு ஜம்மு காஸ்மீர் மாநிலத்தையும்-தேசத்தையும்- கபளீகரம் செய்ய மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிசவாதிகள் முயலுகின்றனர். அதற்காக களம் இறங்கிவிட்டனர்.

ஒரு புறம் பாரத மாதா, வந்தே மாதரம்,ஒற்றுமைச் சிலை , இந்திய ஒருமைப்பாடு பேசிக் கொண்டு மறு புறம் கட்டாய இணைப்புக்குள்ளான இந்திய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், மொழி வாரி மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளையும், ஜம்மு காஸ்மீர் மாநில சிறப்புரிமைகளையும், பழங்குடி மக்களின் பாதுகாப்பு உரிமைகளையும் பறித்தெடுத்து, இந்துத்துவ,இந்திய விரிவாதிக்க,உலகமய பாசிசத்தைக் கட்டவிழ்க்கின்றது மோடி ஆர்.எஸ்.எஸ்.பாசிச ஆட்சி.

மோடி ஆட்சியும் ஈழப்பிரச்சனையும்

இவ்வாறு சொந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சனையில் பாசிச அடக்குமுறைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் மோடி ஆட்சி, ஈழத்தமிழருக்கு `13 இற்கு மேல்` அதிகாரப் பகிர்வுத் தீர்வு பெற்றுத்தரப்போவதாக நாடகமாடுகின்றது.

இக்கட்டுரையின் பாகம் ஒன்றில் நாம் விரிவாக ஆராய்ந்து விளக்கியவாறு தமிழ்த்தரகு அணியும் , தமிழ் ஊடகங்களும் இந்த ஏமாற்றைப் பரப்பி ஏய்த்துப் பிழைத்து வருகின்றன.

``பதவியேற்பு வைபவத்துக்கு அழைத்து அவர் மூஞ்சையில் குத்து விட்டதாகவும், இந்திரா காந்தி பாணியில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தனி அதிகாரியை நியமிக்கப் போவதாகவும் தாங்காத புளுகத்தில் பிரதட்டை எடுத்து வருகின்றனர்.மீண்டும் இந்திய விரிவாதிக்க வலைக்குள் ஈழப்புரட்சியை அடக்கி அழிக்க முயலுகின்றனர்.

இந்திய விரிவாதிக்க அரசு தனது மேலாதிக்கத்தை, இலங்கை மீது திணிப்பதற்காகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை அதிகாரப் பரவலாக்க சீர்திருத்த பாதையில் சீரழிக்கவும்,நீதி  யுத்தத்தை முறியடிக்கவும், விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கவும் ஜே.ஆர்.அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தமே 1987 இந்திய இலங்கை ஒப்பந்தமாகும்.

இந்த ஒப்பந்தம் உறுதி செய்து கொண்ட இந்திய விரிவாதிக்க நலனை, மூடி மறைக்க ஈழத்தமிழர்களுக்கு நன்மை பெற்றுத் தந்தது போல் ஆடிய நாடகப் பதிவுதான் 13வது திருத்தம்.

13 வது திருத்தம்

1) இது தமிழ் மக்களை ஒரு இனமாகக் கூட அங்கீகரிக்கவில்லை.
2) வடக்கு கிழக்கு பிரிவினைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் வழங்கி இன்று வடக்கையும் கிழக்கையும் பிரித்துவிட்டது,
3) தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையை `அதிகாரப் பகிர்வு பேரமாக` முன் வைத்தது.
4) இந்தப் பேரம் கூட வரதன் முதல் விக்னேஸ்வரன் வரை அடையப்படவில்லை!

இதுதான் 13வது திருத்த மாகாணசபையின் நிலை,

இந்தியப் பாசிசமும், இந்திய விரிவாதிக்கமும் என்ற ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களே காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியுமாகும். இவை இரண்டுமே ஈழப்புரட்சியின் எதிரிகள் ஆகும்.

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்த இரு இந்திய விரிவாதிக்க பாசிசக் கட்சிகளின் நிலையும்  தமிழின ஒடுக்கு முறையில் சிங்கள ஆதரவு நிலையே!

இந்திய விரிவாதிக்க நலனுக்கு - இலங்கையின் சீன சார்பு போக்கு- ஒரு பகடைக் காயாகவே ஈழத்தமிழர் பிரச்சனை பயன்படுத்தப்படுகின்றது.
``13 இற்கு மேல் `` என்பது இலங்கை அரசை தட்டி அடக்கும் இந்திய மேலாதிக்கத்தின் கைத்தடியே!

இதனால் ஈழத்தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

எனவே ஈழத்தமிழ், இந்தியத் தமிழ் தரகு அணிகள் கூறுவது போல் மோடி ஆட்சியில் ஈழத்தமிழினம் விடுதலை பெறாது.மாறாக மத ரீதியாக துண்டாப்பட்டு தனது தேசிய அத்தாட்சியை-அடையாளத்தை  இழந்து விடும்.

இதுவே ஈழதேசிய எதிரிகளின் ஒரே குறிக்கோள். இதில் அவர்களின் பயணம் ஆரம்பித்துவிட்டது.

தொடர் (பகுதி 4)


No comments: