Monday 2 December 2013

சிங்களத்தின் யுத்த இழப்புக் கணக்கெடுப்பு, இனப்படுகொலையை மூடிமறைக்கும் இருட்டடிப்பு!

பக்ச பாசிச போர்க்குற்றவாளிகளின் `யுத்த இழப்புக் கணக்கெடுப்பு` இனப்படுகொலையை மூடிமறைக்கும் மோசடி,இருட்டடிப்பு!

பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கையில் நடத்திய இனப்படுகொலைக்கும், மானுட விரோத மற்றும் போர்க்குற்றங்களுக்கும், தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கும் வலுத்து ஒலித்து வருகின்றது.

இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும்,இவ்வியக்கத்தை திசை திருப்பவும் தம்மால் ஆன வழிகளில் எல்லாம் முயன்றனர் பக்ச பாசிஸ்டுக்கள். அத்தகைய ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைபட்டு அம்பலப்பட்டு நின்றனர்.

இப்போது, போர்க்குற்றத்தின் பங்காளிகளான அமெரிக்கா,இந்தியா,சீனா போன்ற நாடுகளாலும் சிங்களத்துக்கு முண்டு கொடுக்க இயலாதவாறு முரண்பாடு முற்றிவிட்டது.இதிலிருந்து தப்பித்துக்கொள்ள இப்போது `சாகடித்தோர்`,மற்றும் `சாய்த்துக் கொண்டுபோனோர்,சொத்தழிப்பு தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப் போவதாகக் கதைவிடுகின்றது!

சிங்களம் கணக்குக் காட்டுவதில் பலே கில்லாடி!

மகாவம்சத்தின் தப்புக் கணக்கைத்தான் சிங்களம் இன்னும் இலங்கையின் குடியேற்ற வரலாறாக போதித்து வருகின்றது.

சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ,குடும்பங்களைத் தலை வேறு,கால் வேறாகத் துண்டாடி, தமிழகத்திற்கு நாடு கடத்தப்பட்டமலையகத் தமிழருக்கு இன்றுவரை கணக்கில்லை.

சிங்கள-முஸ்லிம் கலவரம் முதல், 1983 ஜூலை இனப்படுகொலை வரை,
மாறி,மாறி ஏவிய `கலவரங்கள்` மூலம் சிங்களம் கொன்று குவித்தவர்களுக்கு எந்தக் கணக்கும் இல்லை! கொன்றவர்களுக்கு விசாரணையோ, தண்டனையோ கூட இல்லை.மாறாக இந்தக் குற்றவாளிகள் பதவி உயர்வும், பரிசில்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதற்கு ஏராளம் உதாரணங்கள் இலங்கையில் உண்டு.

1977 பொதுத்தேர்தலை ஒட்டி, எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் அவர்களும், அவரது பாரியாரும் யாழ் பொலிஸ் நிலையத்துக்குச்  சென்றபோது, பாரியாரை வசை பாடி, வாகனத்தை அடித்து நொருக்கிய ஒரு சாதாரண சிங்கள பொலிஸ்காரர்,துணைப் பொலிஸ் அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டு, சிங்களப் பகுதிக்கு இடமாற்றம் பெறும் சலுகையும் பெற்றார்!

யுத்தத்திற்குமுன்னால்,எந்தளவுக்கு தமிழர்களுக்கு அநீதியும் ,அட்டூழியமும், இழப்பும் ஏற்படுத்துகின்றார்களோ, அந்தளவுக்கு அரசியல் செல்வாக்கும், அதிகாரச் சுவையும்,பதவி உயர்வும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை யுத்த காலத்தில் `கண்மூடித்தனமான தாக்குதலும், காட்டுமிராண்டித்தனமான படுகொலையும் எந்தளவுக்கெந்தளவு, அதிகமாகவும்,குரூரமாகவும் கட்டவிழ்த்து விடப்படுகின்றதோ அந்தளவுக்கு பதவி உயர்வும் , அதிகார அந்தஸ்த்தும் அளிக்கப்பட்டு வந்தது.` இராணுவ ஒழுக்க நியதி-Code of Conduct- என்பது இன ஒடுக்குமுறையாகவே இருந்தது.இவ்வாறு தான் `தலை முதல் கால் வரை` ஒரு இன வெறிப் பட்டாளம் கட்டியமைக்கப்பட்டது.இது முப்படைகளுக்கும் பொருந்தும்,
முழு அரச எந்திரத்துக்கும் பொருந்தும்.

முப்பது ஆண்டுகாலப் போரில் ஒரு சமர்க்களத்திலாவது சிங்களம் வெற்றி பெற்றதில்லை.ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலில் இருந்து, ஆனையிறவு பெரும்படைத்தள வீழ்ச்சி வரை பின்வாங்கி ஓடிய பெருமை மிக்கது சிங்களம்.பின்னர் இந்தத்தளபதிகளுக்கு பட்டயங்களும், பதவி உயர்வுகளும் எதனால் கிடைத்தன? படுகொலைகளாலும்,பெண் வதைகளாலும், பாதாளக்குழிகளாலும் பெறப்பட்டவை அவை. அதிகம் அழித்தவன் அதிகம் செழித்தான்.சரத் பொன் சேகா,சந்திர சிறீ, மேஜ ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்கள் இவ்வாறு தான் `கட்டளைத் தளபதிகள்` ஆனார்கள்.இப்படி ஒரு பட்டியலே போடலாம் விதி விலக்கில்லாமல் அனைத்துத் தளபதிகளுக்கும்!

யுத்தகாலத்தில் போர்க்களச் சேதங்கள் குறித்து `லங்கா புவத்`- சிங்கள அரச ஊடகம் காட்டிய கணக்குப் புழுகு மூட்டைகளால் ஒரு செங்கோட்டையே கட்டலாம்.ஏறத்தாழ 1986 அளவில் சிங்களம் கொன்றழித்தாகக் கூறிய `புலிப் பயங்கரவாதிகளின்` எண்ணிக்கைபுலிகளின் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் தாண்டிவிட்டது!இதற்குப் பிறகுதான் இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டது.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த சிங்கள பின்தங்கிய கிராமப்புற சிறு விவசாய இளைஞர்களின், ஜே.வி.பி தலைமையில் நடத்தப்பட்ட கிளர்ச்சியில் நரபலி எடுக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன கணக்கு? எங்கே விசாரணை? ஜே.வி.பி.தலைவர் ரோகண விஜேவீராவை அவர் பதுங்கியிருந்த (தலைமறைவாக இருந்த) மாளிகையில் கைது செய்து, நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டு வீசியது பிரேமதாசாஅரசு.இங்கேதான் இரத்தத்தை பருகவும், பிணத்தைப் புசிக்கவும் கற்றுக்கொண்டது சிங்களம். இது முள்ளிவாய்க்காலுக்கான ஒத்திகையாகும்.அங்கே (சிறீலங்காவில்) களனி ஆறு காவிச்சென்றது, இங்கே (தமிழீழத்தில்) நாயும் தின்னாமல் நாறிக்கிடந்து மண்ணோடு மண்ணானது வேட்கை!

அன்றைய மனித உரிமையாளரும், இன்றைய மாட்சிமை தங்கிய மகாராஜாவுமாகிய ராஜபக்சவோ, யு.என்.பி.ஆட்சியாளர்களோ கால்
நூற்றாண்டுகளாக தம் சொந்தத் தேசிய சிங்கள இன இளைஞர்களை,அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நாட்டுப் பிரிவினையை எதிர்த்தும் போராடிய தங்கள் சொந்தப் புதல்வர்களுக்கு நீதி வழங்கவில்லை.

ரோகன விஜே வீர ஈழப்பிரிவினை
எதிர்ப்பாளர்
சமூக தேசிய வெறியர்களான ஜே.வி.கும்பலும், அதிலிருந்து கிளைவிட்ட NGO உதிரிகளும், குழுக்களும் இத்தகைய ஒரு நீதிக்காக இன்றுவரை போராடவில்லை.ஜே.வி.பி.சமூக தேசிய வெறியர்களோ கொலைபாதகர்களுடன் கூட்டமைத்து, தமிழின விரோத நஞ்சை சிங்கள மக்களிடையே கக்கி அரச அதிகார சுகம் அநுபவித்து வருகின்றனர்.

தமிழீழம் முழுவதும் மாவீரர் துயிலும் இல்லங்கள் உழுது தரை மட்டமாக்கப்பட்டுவிட்டன. ஆனால் இரு தேசிய இனமக்களும் வெளியேறு என்று கோரி இரத்தம் சிந்திப் போராடி, இறுதியில் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவே வெளியேற வேண்டும் என்று கோரிய இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு ஒரு நினைவாலயத்தை எழுப்பி சிங்களம் தொழுது வருகின்றது.

சிங்களம் காட்டாத கணக்கு:

விடுதலைப் புலிகளின் யுத்தத்தின் இறுதிக்கடத்தில்

 1) முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சிக்குண்டிருந்த மக்கள் தொகை
2) நந்திக்கடல் தாண்டி சிங்களத்திடம் சரணடைந்த மக்கள் தொகை
3) யுத்தக் கைதி மக்கள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் தொகை
4) அங்கிருந்து கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட நபர்கள் தொகை
5) சரணடைவு உத்தரவை ஏற்று, சரணடைந்த போராளிகளின் தொகை,
6) பகிரங்கமாக அறியப்பட்டு சரணடைந்த முக்கிய நபர்களின்தொகை, நிலை தொடர்பான பதில்
(உதாரணமாக: அனந்தி அவர்களின் கணவர் எழிலன்,ஈரோஸ் பாலகுமார், புலவன் புதுவை இரத்தினதுரை) இவையெல்லாம் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல் திரட்டி பதில் சொல்லுகின்ற விடயங்கள் அல்ல.இந்த தகவல்களை மக்களிடம் இருந்து பெற முடியாது அரசிடம் இருந்தே பெற முடியும்.

இவற்றுக்கு எல்லாம் சிங்களத்திடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை இல்லை.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்த யுத்தகாலம் முழுமையிலும், இறுதிக்கட்டத்திலும் மொத்தமாக இறந்த முப்படைத்தரப்பினர்
எத்தனைபேர் என்று கூட சிங்களம் இதுவரை கணக்குக் காட்டியதில்லை!

இத்தகைய `கணக்கெடுப்பு வரலாற்று` கீர்த்திகள் பெற்ற சிங்களம், இப்போது `யுத்த இழப்புக் கணக்கெடுப்பு` நடத்திக்கொண்டிருக்கின்றது.

 `யுத்த இழப்புக் கணக்கெடுப்பு` சிங்களத்தின் பிரகடனம்.

1) கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மற்றொரு கோரிக்கை நிறைவேற்றம்.

2) யுத்த உயிர் இழப்பு நாற்பதினாயிரம்,ஒன்றரை இலட்சம் என கூறுபவர்கள் கூறட்டும், நாம் ஆய்வு செய்து உண்மையை நிரூபிப்போம்.

3) இது ஒட்டுமொத்த இலங்கை நாடு தழுவிய கணக்கெடுப்பாகும்.

4) 1982 இலிருந்து 2009 வரையான 27 ஆண்டு நிகழ்வுகளின் கணக்கெடுப்பு இதுவாகும்.

5)14,022 கிராம சேவகர் பிரிவுகளில், 16,000 பணியாளர்கள் இக்களப்பணியில் இறக்கப்பட்டுள்ளனர்.

6)Thursday November 28 இல் ஆரம்பித்து  டிசம்பர் 15 2013 இல் இந்த களப்பணி முடிவு செய்யப்படும்.

7)சர்வதேச தரம் வாய்ந்த புள்ளிவிபர மதிப்பீடுகளை வழங்கியுள்ள புள்ளிவிபரத் திணைக்களத்தால் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

8)இதன் மூலம் உலகத்துக்கு  உண்மையை உரைக்கும் எமது அரசின் கடமையை நாம் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு சிங்களம் பிரகடனம் செய்துள்ளது.

ஆனால் பி.பி.சி.தமிழோசையில் மக்கள் அளித்த தகவல்கள் முற்றிலும் வேறுவிதமாக உள்ளன.

Professionally designed household survey

1) இந்தக் கள ஆய்வுக்காக L1,L2 என இரண்டு படிவங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுள்ளன.

2) இதில் படிவம் 1ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களதும் பொதுவான விபரங்கள் ( பெயர்,வயது,தொழில்,படிப்பு,மதம்
இத்தியாதி..இத்தியாதி) அடங்கியதாகும்.மேலும் இது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல நாடு தழுவிய இலங்கையின்
மொத்தச் சனத்தொகைக்குமான கள ஆய்வாகும்.இதில் எவருக்காவது போரினால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் ) L2 படிவம் நிரப்பப் படுகின்றது.

3) L2 படிவம் யுத்த உயிர் இழப்புகள் குறித்து பின்வரும் முக்கிய கேள்விகளை உள்ளடக்கியுள்ளது, அவையாவன;

அ) புலிப்பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டவர்கள்,

ஆ) வேறு பயங்கரவாதக் குழுக்களால் கொலை செய்யப்பட்டவர்கள்,

இ) இராணுவம் என சந்தேகப்படும் குழுக்களால்  கொலை செய்யப்பட்டவர்கள்.

ஆக இந்த`` professionally designed household survey`` இல்  இலங்கை முப்படையினரால் குறிப்பாக இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்ற ஒரு கேள்வியே இல்லை.இந்தக் கேள்வி இல்லாமல் யுத்த இழப்பைக் கணக்கிடுவது எப்படி? இராணுவம் என சந்தேகிக்கப்படும் குழுக்கள்
30 ஆண்டுகள் கொலை செய்து கொண்டு திரிய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஒருவேளை இந்தக் கள ஆய்வில் இராணுவம் என சந்தேகப்படும் குழுக்களால்  கொலை செய்யப்பட்டவர்கள், 40000 என அறியப்பட்டால், அந்த இராணுவம் என சந்தேகப்படும் குழுக்களை எங்கே கண்டு பிடிப்பது? எப்படித் தண்டிப்பது? எவரைத் தண்டிப்பது?

4) மேலும் இந்த  L2 படிவம் கணவன் மனைவி பிள்ளைகள் அடங்கிய குடும்பத்தை முறையீடு செய்வதற்கு உரிமையுள்ள சமூக அலகாக
அனுமானிக்கின்றது.இதன் மூலம் ஒரு குடும்பம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் இணைத்துக்
கொள்ளப்படமாட்டார்கள்.அவர்கள் சார்பில் எவரும் முறையீடு செய்யமுடியாது.இதனால் தான் இது `` professionally designed household survey`` என
அழைக்கப்படுகின்றது.

நவாலி புனித
பேதுருவானவர் தேவாலயம்

சிங்களம் இந்த யுத்தத்தில் தமிழீழ மக்களை குடும்பம் குடும்பமாகக் காவுகொண்டது.வீடு வீடாகச் சென்று நடத்திய படுகொலைகள் மட்டுமல்ல,
பன்குளம் விவசாயிகள் படுகொலை, குமுதினிப் படகுப் படுகொலை, நவாலி தேவாலயப் படுகொலை,புத்தளம் பள்ளிவாசல்ப் படுகொலை இவ்வாறு
தொகுப்புத் தொகுப்பாக, கூட்டம் கூட்டமாக, குவியல் குவியல்களாக கொன்று குவித்திருக்கின்றது.இதில் எல்லாம் குடும்பம் குடும்பமாக மக்கள்
கொன்றொழிக்கப்பட்டனர்.திருமண மண்டபத்தில் குண்டு வீசி திருமணத் தம்பதிகளை கொன்றொழித்து மணவீட்டைப் பிணவீடாக்கியது சிங்களம்.

நவாலி புனித பேதுருவானவர் தேவாலயம் தஞ்சம் புகுந்த அகதிகள் சந்திரிக்கா அரசின் விமானத்தாக்குதலில் ஆலயத்துக்குள் குடும்பம் குடும்பமாக பலியான சோகம்.












எனவே இந்த ஒரு அனுமானமே- அல்லது தடையே யுத்த இழப்பின் பாதிச் சனத்தொகை பதிவு பெறாமல் போவதற்கு போதுமானது.
5) 1982 இலிருந்து 2009 வரையான கால யுத்த இழப்பைக் கணக்கிடும் .professionally designed household survey ஏனோ இந்திய ஆக்கிரமிப்புப் படையின் கொலை வெறியாட்டம் குறித்தும் எதுவும் கேளாமல் இருட்டடிப்புச் செய்துவிட்டது.

ஜனாதிபதி பிரேமதாசா நாட்டை விட்டு வெளியேறக் கோரிய IPKF இற்கு சிங்களம் கட்டியெழுப்பியுள்ள நினைவாலயம்.

ஆக இதுதான் சிங்களம் யுத்த இழப்புக் கணக்கெடுப்பு நடத்தும் சீத்துவம்.

இவ்வாறு ஒரு போலிக் கணக்கெடுப்பை நடத்தி உண்மையான இழப்பை மறைக்கவும், தான் நடவடிக்கை எடுத்ததாகக் காட்டவும், அதுவே சரியானது என வாதாடவும் முயலுகின்றது சிங்களம்.


போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம்! தமிழீழப் பிரிவினைக்கு பொது வாக்கெடுப்புக் கோருவோம்!!

 என நாம் முழங்கும் போது, பக்ச பாசிஸ்டுக்களின் யுத்தப் பங்காளிகளான, அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும்,ஐ.நா சபையும் `நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிறைவேற்று` என சிங்களத்தைக் கோரிவந்தனர்.அதன் படி சிங்களம் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்திவிட்டது.காணாமல் போனோர் ஆணைக்குழு முதலாவது கலைந்து மற்றது பிறக்கப்போகின்றது.இப்போது யுத்த இழப்புக் கணக்கெடுப்பு நடத்துகின்றது.ஆக ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவை எதிர்கொள்ள சிங்களம் தயாராகிவருகின்றது.வடக்குத் தேர்தல் விக்னேஸ்வரன் வீட்டுத்தோட்டம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றார், விக்கி சம்பந்தன்,சுரேஸ் சுமந்திரன் &co  ஜனாதிபதியோடு நல்லிணக்கம் கண்டுள்ளனர்.

தமிழீழ மக்களுக்கு கிடைத்தது என்ன?

யுத்தக் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை,காணாமல் காவு கொள்ளப்பட்டோர் யாரும் கண்டுபிடிக்கப் படவில்லை,சலிப்புற்ற மக்கள் மரணச் சான்றிதழ்கள் பெறத் தொடங்கி விட்டனர்.யுத்தத்தேவைக்காக கைப்பற்றப்பட்ட விவசாயக் காணிகள் மீளக் கையளிக்கப்படவில்லை.மீள்குடியேற்ற உரிமை மறுக்கப்படுகின்றது.நில அபகரிப்பும்,பெளத்த விரிவாதிக்கமும் பரவுகின்றது.யுத்தத்துக்குப் பின்னான சமாதானச் சந்தையை பங்கு போட அந்நிய வல்லூறுகள் பசி தாகம் கொண்டு விசர் நாய் போல் அலைகின்றன.பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கையை ஒரு சூதாட்ட நாடாக மாற்றி வருகின்றனர்.இதற்கேற்ப இராணுவமயப் படுத்தி வருகின்றனர்.

யுத்தத்துக்குப் பின்னான சமாதானச் சந்தையை பங்கு போடும் உலகமயமாக்கலும்,தமிழீழ சுய நிர்ணய (வாக்கெடுப்பு) மறுப்பும்,
இராணுவ மயமாக்கலும் ஒன்றோடு ஒன்று கை கோர்த்து பயணிக்கின்றன.

இந்தப் பின்புலத்தில் சிங்களம் தமிழீழ ஆக்கிரமிப்பை தீவிரப் படுத்திவருகின்றது.பாலஸ்தீனத்தை இஸ்ரேல் விழுங்கிய மாதிரி தமிழீழத்தை விழுங்க கங்கணம் கட்டியுள்ளது. இதைத் தமிழர்கள் தடுக்க இயலாதவாறுஇராணுவம்,புலனாய்வுப்பிரிவு,கூலிப்படைகள்,உள்ளூர் உளவாளிகள் அடங்கிய பாசிசச் சூழலில் தமிழீழம் கூண்டுக் கிளியாகியுள்ளது. வடக்கில் நாலு மனிதருக்கு  ஒரு இராணுவீரர் என விகிதாசாரம் இருப்பதாக தேர்தல் ஜனநாயக நீதிபதி விக்கி கூறுகின்றார்.தமிழீழ விடுதலை யுத்தம் ஓய்ந்ததோடுஇஸ்லாமியத் தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் எதிரான தாக்குதலை பாசிச பிக்கு முன்னணி ஏவிவருகின்றது.இவைதான் ஏகாதிபத்தியவாதிகளும்,இந்திய விரிவாதிக்க அரசும்,விக்கி சம்பந்தன்,சுரேஸ்,சுமந்திரன் & co வும் தமிழீழ மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தவை.

இந்த நிலைமையைப் புரிந்து தமிழீழ மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன.இங்கிலாந்துப் பிரதமர்
டேவிட் கமெரனின் அதிகாரபூர்வ வடக்கு சுற்றுப் பயணத்தை வழிமறித்து தமிழீழ மக்கள் நடத்திய பிரச்சார சமர், வலிகாமம் மேற்கு மக்களின் நில
மீட்புப் போராட்டம், 2013 தமிழீழ மாவீரர் தின அனுஸ்டிப்பு,மலையகத் தமிழர்களும், இஸ்லாமியத் தமிழர்களும் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்கள் நிரூபித்துள்ளன.

ஏகபோக உலகமய பொருளாதார அமைப்பு மீளமுடியதா நெருக்கடியில் சிக்குண்டுள்ளது.இதன் விளைவாக இதைச் சார்ந்த உற்பத்திச் செயல் முறையைப்பின்பற்றிய நாடுகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.இதிலிருந்து மீள்வதற்காக மெற்கொள்ளப்பட்ட உலக மறுபங்கீட்டு யுத்தங்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள்,அரபு வசந்தங்கள்,வர்ணப் புரட்சிகள் அத்தனையும் தோல்விகண்டுவிட்டன.வேலையின்மைப் பிரச்சனை ஐரோப்பாவை உலுப்பி எடுக்கின்றது.குறிப்பாக இளைஞர் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.சில நாடுகளில் 50வீதத்தை எட்டிவிட்டது.உள்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் -பொருளாதார சிக்கன நடவடிக்கைகள்-இலட்சோப இலட்சம் மக்களை தம் சொந்த அரசுகளுக்கு எதிராக வீதியில் இறக்கியுள்ளது.மேலை நாடுகளின் பெரு நகரப் பெருந்தெருக்கள் எல்லாம் போர்க்களமாய்க் காட்சியளிப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது.இது கீழை நாடுகள் எங்கும் பரவிவருகின்றது. எவ்வளவுதான் பாசிச சர்வாதிகாரத்தக் கொண்டு இவர்கள் மக்களை மிரட்டினாலும்,கோழைத்தனமான மேலும் கோரத்தனமான றோன் தாக்குதல் நடத்தி தமது வீரத்தைப் பறை சாற்றினாலும், இவர்கள் காகிதப் புலிகளே என்பதை போராடும் மக்கள் நிரூபித்து வருகின்றனர்.

எனவே நவீன காலனியாதிக்க தாசர்களின் ஏகாதிபத்திய,இந்திய விரிவாதிக்க சார்பு சமரசப் பாதையை எதிர்த்து, புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில்
தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்புக்கோரி போராடுவோம்!

மலையக, இஸ்லாமிய தமிழர்களுடன் ஐக்கியப்படுவோம்!

உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

பக்ச பாசிச,போர்க்குற்றவாளிகளின்
`யுத்த இழப்புக் கணக்கெடுப்பு` 
இனப்படுகொலையை மூடிமறைக்கும் மோசடி இருட்டடிப்பு!

என்ற முழக்கத்தை தெருமுனை எங்கும் அறைவோம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்


புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

No comments: